இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday 3 December, 2009

வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா....

எழுத வந்து ரெண்டு வருஷமாகப் போகுது. ஆரம்பத்துல வேர்ட்பிரஸ்ல எழுதிக்கிட்டிருந்தேன். என்னதான் அழகா இருந்தாலும், சில வசதிகள் முடக்கப்பட்டிருந்தது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு.

அதனால ரொம்ப நாளாவே ப்ளாகருக்கு மாறனும்னு நெனைச்சிருந்தேன். கொஞ்ச நாளா முயற்சி பண்ணி, இந்தத் தளத்த உருவாக்கி இருக்கேன்.

புது தளத்துல புதுசா “நாராயணன் கூப்பு” ங்கற தொடர எழுதப் போறேன். சூரியன் படத்துல கவுண்டமணி சொல்லுவாரே.... “டேய்... நாராயணா”ன்னு. அதே நாராயணனோட கூப்புதான். அந்தந்த வாரத்து நெலவரங்கள கூப்பு நாராயணனும் (பசி நாராயணன்), பன்னிக்குட்டி ராமசாமியும் (கவுண்டமணி) பிஞ்ச மண்டையரும் (ஓமகுச்சி நரசிம்மன்) சேந்து அலசுறதுதான் இந்தத் தொடர்.

வற்ற சனிக்கிழமைலேந்து ஆரம்பமாகுது. அந்த வீட்டுல குடுத்த மாதிரியே இந்த வீட்டிலயும் ஆதரவு தரணும்.

கொலை வெறிக் கவிதைகள் 1754 – 5

ஆட்டோகிராஃப்

மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் சுமதி
ஐந்தாம் வகுப்பில் ரோசி
ஆறாம் வகுப்பில் தென்றல்
+1ல் திரிபுரசுந்தரி
கல்லூரியில் மாதங்கி
2003 ஜனவரி முதல் மே வரை வித்யா
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை அனுஷா!

இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!

[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]

குறிப்பு: வேர்ட்பிரஸ்ஸிலிருந்து ப்ளாகருக்கு மாறுவதால் தமிழ்மணம் மற்றும் இதர திரட்டிகளில் இணைப்பதற்காக பழைய தளத்திலிருந்து இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.

கொலை வெறிக் கவிதைகள் – 6



நல்ல மழை அன்று,
உன் பூப்போட்ட குடையுடன்
பள்ளியிலிருந்து புறப்பட்டாய்.


உன் குடைக்குள்
எனக்கும் ஒரு இடம் தேடி
கையிலிருந்த குடையை
சட்டைக்குள் பதுக்கினேன்.



வேண்டுமென்றே உனக்கு முன்னால்
நனைந்தபடியே ஓடியபோது,
எதிர்பார்த்தபடியே என்னை
விரல் சொடுக்கி அழைத்தாய்.


நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்…



என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்.



என் வீதித் திருப்பத்தில்
நம்மிருவர் வழியும் வேறானது…



வீதிக்குள் நுழைந்ததும்
மறைத்த குடையை
விரித்துப் பிடித்தேன்…
வீட்டை நெருங்கிய நொடிகளில்
தற்செயலாகத் திரும்பியபோது
விழியெல்லாம் நெருப்பாக நீ…



அப்பட்டமாய்ப் புரிந்தது
உன் விழிகளின் மொழி…
திருட்டுப் பயலே…



குறிப்பு: வேர்ட்பிரஸ்ஸிலிருந்து ப்ளாகருக்கு மாறுவதால் தமிழ்மணம் மற்றும் இதர திரட்டிகளில் இணைப்பதற்காக பழைய தளத்திலிருந்து இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan