இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 17 January, 2011

பாசத் தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியீடு








நாட்கள் குறைவு, இன்றே டெம்ப்ளேட்டை நிரப்பிடுவீர்...

Thursday 6 January, 2011

தெலங்கானா - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை

”உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் உண்மையை ஒருநாள் நேர்கொண்டே ஆக வேண்டும்.” இந்த வாக்கியத்துடன் முடிகிறது ஸ்ரீகிருஷ்னா கமிட்டியின் அறிக்கை. பிப்ரவரி 2010ல் அமைக்கப் பெற்ற இந்த ஐந்து நபர் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா தலைமை வகித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலங்கானா தனி மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது. கடந்த வியாழனன்று உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை விபரத்தைப் படிப்பதற்காகத் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்ட போது மிக அதிகமானோர் இதே அறிக்கையைத் தரவிறக்கப் போராடிக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறும் 11 எம்பி அளவுள்ள கோப்பை தரவிறக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. என்.டி.டிவி, இந்து போன்ற பெரிய பத்திரிகைகளால் கூட அறிக்கையைத் தரவிறக்க முடியாமல் உடனடியாகச் செய்தியைக் கொடுத்தாக வேண்டிய அவசரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடுப்பையே செய்தியாகப் போட்டிருந்தனர்.

இப்படித் தான் இருக்கும் என்று ஊகிக்கக் கூடிய விதத்திலேயே வந்திருக்கிறது அறிக்கை. இந்தச் சிக்கலுக்கு ஆறு விதத்தில் தீர்வு காணலாம் என்று பரிந்துரைக்கிறது கமிட்டி.

1. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தற்போதைய ஆந்திரப் பிரதேசம்
2. ஆந்திரப் பிரதேசம் - தெலங்கானா = சீமாந்திரா (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா)
3. ஆந்திரப் பிரதேசம் - கடற்கரை ஆந்திரா = ராயல தெலங்கானா (ராயலசீமை + தெலங்கானா)
4. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா - ஹைதராபாத் யூனியன் பிரதேசம் = (ஹைதராபாத் இல்லாத) தெலங்கானா
5. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா = ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா
6. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கௌன்சிலுடன் கூடிய ஆந்திரப் பிரதேசம்

இந்த ஆறு தீர்வுகளில் முதல் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை என்று அறிக்கையைத் தயாரித்த ஸ்ரீகிருஷ்னா தலைமியிலான குழுவே தெரிவிக்கிறது. நான்கு, ஐந்து அல்லது ஆறு, இம்மூண்றில் ஒன்றைத் தீர்வாக முன்னெடுக்க அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசிக்க இருக்கிறது மத்திய அரசு.

பரிந்துரை நான்கில் கூறியுள்ளபடி ஹைதராபாத் தனி யூனியனாகவும், தெலங்கானா மற்றும் சீமாந்திரா தனித் தனி மாநிலங்களாகவும் பிரிக்கப் படுவதும் முதல் மூண்று பரிந்துரையைப் போலவே சாத்தியமற்றது என்று தான் சொல்ல வேண்டும். அமையவுள்ள தெலங்கானா மாநிலத்தின் வருவாய் ஆதாரமே ஹைதராபாத் பகுதி தான் எனும்போது தெலங்கானா பகுதியினராலும் இந்தத் தீர்வை ஏற்க முடியாது. இந்தத் தீர்வு முன்னெடுக்கப் படுமானால் தெலங்கானா வளர்ச்சி குறைந்த பகுதி என்பதிலிருந்து வளர்ச்சி குறைந்த மாநிலம் என்பதாக வேண்டுமானால் பரினாமம் பெறலாம். மேலும் தற்போதைய ஹைதராபாத் பகுதியை மட்டும் கொண்டு தனி யூனியனைக் கட்டமைத்துவிட முடியாது. கடற்கரை ஆந்திராவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியே ஹைதராபாத் யூனியனை உருவாக்க முடியும். இதற்கு கடற்கரை ஆந்திர மக்களும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை.

அடுத்து ஐந்தாவது பரிந்துரை. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப காலம் முதல் வலியுறுத்தி வரும் தீர்வும் இது தான். இதன்படி பழைய நிஜாம் சமஸ்தானம் மொத்தமும் தனி மாநிலமாகப் பிரிக்கப்படும். ஏறக்குறைய 1956ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை என்று சொல்லலாம். ஆனால் இந்தத் தீர்வும் பல சிக்கல்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஆசிரியர், அரசு ஊழியர், காவல் துறையினர், வணிகர்கள் என்று பல தரப்பிலும் சீமாந்திர பகுதியைச் சேர்ந்தவர்களே தெலங்கானாவிலும் கோலோச்சுகின்றனர். இந்த அளவுக்குத் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் சீமாந்திராவில் இல்லை. மாநிலப் பிரிவின் கீழ் வருகிற துறைகளில் இடமாறுதல் என்பது பெரும் சிக்கலுக்கு உள்ளாகும்.

தெலங்கானா மாநிலம் அமைந்தாலும் கூட பழையபடியே சீமாந்திராவைச் சேர்ந்தவர்களே கல்வி, காவல் துறை போன்றவற்றில் தொடர்ந்து கோலோச்சுவர். ராமாநாயுடு, ராமோஜி ராவ், ஜி.எம்.ஆர் குழுமத்தினர் என்று சீமாந்திராவிலிருந்து வந்தவர்கள் தங்களது வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய அளவுக்கு தெலங்கானா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எவரும் வளரவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது . அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறை இவற்றில் உள்ள சீமாந்திரப் பகுதியினர் ஓய்வு பெற்று அந்த இடங்கள் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்தத் தீர்வின் கீழ் உள்ள இன்னொரு சிக்கல் நதி நீர்ப் பங்கீடு. தெலங்கானா பகுதில் ஓடுகிற நதிகள் இருந்தாலும், உருவாகிற நதிகள் எதுவும் இல்லை. மராட்டியத்தில் உருவாகிற கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகளை நம்பித்தான் மொத்த ஆந்திர மாநிலத்தின் விவசாயமும். பிரிகிற இரண்டு பிரதேசங்களும் நதிநீருக்காக மோதிக் கொள்ளுகிற நிலை ஏற்படலாம். ஆகவே தனி மாநிலம் அமைவதற்கு முன்னாலேயே இது போன்ற சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நதிநீர்ப் பங்கீட்டுக்கு நீண்ட காலம் செல்லுபடியாகக் கூடிய ஒப்பந்தம் இரு பிராந்தியங்களுக்கிடையில் கையெழுத்தாக வேண்டும்.

ஆறாவது பரிந்துரைக்கும் முதல் பரிந்துரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கவுன்சில் ஒன்று மட்டும் புதிதாக முளைத்திருக்கும். முந்தைய பரிந்துரையில் அலசப்பட்ட சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்யும் அமைப்பாக இது இருக்கும். இந்தத் தீர்வு தெலங்கானாவை ஆதரிக்கும் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகலாம். ஆனால் சீமாந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீர்வையே வலியுறுத்துவார்கள்.

இந்தப் பரிந்துரைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரியும். இரு தரப்பினருக்கும் இணைந்திருக்கும் விருப்பம் இல்லை. அதே நேரத்தில் ஹைதராபாத் பகுதியையும் இழக்க விரும்பவில்லை. சற்றேரக் குறைய மாநிலத்தின் 42 சதவீத வருவாயை ஈட்டித் தரும் பிராந்தியம் தெலங்கானா. தெலங்கானா பிராந்தியத்திலும் குறிப்பாக ஹைதராபாதிலிருந்து தான் பெரும்பங்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இதல்லாமல் கிருஷ்ணா நதி மாநிலத்தினுள் நுழையும் இடமும் தெலங்கானா பிராந்தியத்திலேயே அமைந்திருக்கிறது. ஆகவே தெலங்கானா பிரிந்து போவதை சீமாந்திர மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை. அதே நேரம் இந்தப் போராட்டத்தின் நிமித்தமாக ஏராளமான உயிர்சேதங்களைச் சந்தித்த தெலங்கானா மக்களும் தலைவர்களும் மாநிலப் பிரிவினையைத் தவிர்த்து வேறு எதனாலும் சமாதானமடையப் போவதில்லை.

2010 தொடக்கத்தில் பற்றி எரிந்த பிரச்சினையைப் பதினோரு மாதங்கள் ஆறப் போட்டது தவிர இந்தக் கமிட்டி பெரிதாக என்ன சாதித்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொறுத்திருக்க நாம் தயாராக இருந்தாலும் தெலங்கானா ஆதரவாளர்கள் தயாராக இல்லை. இதோ ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தணிந்திருந்த போராட்டக் கணல் சாம்பல் விலகி வெளிச்சம் காட்டத் தொடங்கிவிட்டது.

Tuesday 4 January, 2011

ரக்த சரித்திரம் - III

மணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள் இருவரைக் குறித்து ஏதும் நினைவில் ஓடவில்லை.

அலுவலகம் வந்தடைந்த போது உணவருந்துமிடத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைக் கூட கவனிக்கத் தோண்றவில்லை. என் இருக்கையில் அமர்ந்த போது தான் பின்னால் இருவர் சூரியைக் குறித்துப் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. சூரி தாக்கப்பட்டார் என்ற அளவில் தான் அப்போதைய பேச்சுக்கள் இருந்தன. இரவு 12:30க்கு வீட்டுக்கு வந்து சேர்ந்த போது தொலைக்காட்சி செய்திகள் சூரியின் மரணத்தை உறுதி செய்தது. சாக்‌ஷி தொலைக்காட்சியில் பிணையில் விடுதலையாகி வந்த பிறகு சூரியிடம் பேட்டி கண்ட காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ரக்த சரித்திரம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் முழுக்க முழுக்க சூரியைத் தூக்கிப் பிடிக்கிற விதமாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ரவி தரப்பினரின் கருத்து. தெரிந்தோ தெரியாமலோ ராம்கோபால்வர்மா இரு தரப்பிலும் புகைந்து கொண்டிருந்த பழி உணர்ச்சிக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது. சூரியின் கொலையில் ஆந்திர காங்கிரசின் பெரிய கைகளுக்குத் தொடர்பிருக்கிறது என்று தனி ஆவர்தனம் செய்கிறார் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர வரலாற்றில் பரிதாளா ரவியின் அத்தியாயம் முற்றுப் பெற்ற பிறகு சூரியின் தயவு காங்கிரசுக்குத் தேவையில்லாமல் போய்விட்ட நிலையில் ஜகன்மோகன் ரெட்டியின் கூற்று நிராகரிக்கத் தக்கதல்ல.

சீமாந்திர (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா) அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டம் அனந்தபூர். ரவி மற்றும் சூரியின் குடும்பங்களைக் கணக்கில் கொள்ளாவிடில் அனந்தபூர் சரித்திரம் நிறைவுபெறாது. ஜெகன்மோகன் தொடங்கவிருக்கும் தனிக்கட்சி இந்த சீமாந்திரப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை தெலங்கானா மாநிலம் அமைக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளிக்குமானால், சீமாந்திராவைக் தனது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்புகிறார் ஜெகன். இப்பகுதியின் முக்கிய மாவட்டமான அனந்தபூரில் செல்வாக்குப் பெறாவிடில் சீமாந்திராவில் கோலோச்சுவது நடவாத காரியம். பரிதாளா ரவியின் ஆதரவாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரி படுகொலை ஜெகன்மோகனுக்குப் பயன்படக்கூடும் என்றும் நம்பப்படுவதால் சந்தேகத்தின் நிழல் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் விழுகிறது.

ஜனவரி 6ம் நாள் தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஆந்திர மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவாதிக்க உள்ள நிலையில் நடந்தேறியுள்ள இந்தக் கொலைச் சம்பவம் சீமாந்திரப் பகுதியின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும் முழுவதுமாக நிராகரிப்பதற்கில்லை.

குழுவாதியாக (ஃபேக்‌ஷனிஸ்ட்) இருந்ததால் வாழ்க்கையின் முக்கியமான சந்தோஷங்கள் பலவற்றை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்த சூரி, இரு தரப்பிலும் பழிவாங்குதலுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிற எல்லோரும் தத்தமது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இரண்டு தரப்புக்கும் இடையே நடந்த உக்கிரமான மோதலில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகு சூரிக்கு வந்தது காலம் கடந்த ஞானோதயம் என்று தான் சொல்ல முடியும். எது எப்படியோ, பழிவாங்கும் படலத்தின் பற்களை நனைத்திருக்கும் சூரியின் குரல்வளை ரத்தம் “ரக்த சரித்திரம் - III" க்கு பேனா மையாகப் பயன்படக்கூடும்.

முற்றும் அல்லது தொடரும்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan